திருப்பூர் சப் கலெக்டராக பொறுப்பேற்றார் நடிகர் சின்னி ஜெயந்த் மகன்

திருப்பூர்: தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் சின்னி ஜெயந்த். இவர் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பலகுரலில் பேசும் திறன் மிக்கவர். நடிகர்களின் வாரிசுகள், திரைத்துறையில் கால்பதிப்பது வழக்கமாக உள்ளது. சின்னி ஜெயந்த் மகனான ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கோ, கலெக்டர் ஆக பணிபுரிய மிகுந்த ஆர்வம்.

கடந்த 2019 ல் நடந்த ஐ.ஏ.எஸ்., தேர்வில், இந்திய அளவில் 75 வது ரேங்க் பெற்று, மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துறை உதவி செயலர் ஆக நியமிக்கப்பட்டார். பல்வேறு மாநிலங்களில் இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 12 பேர், தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளனர். இவர்களில், ஸ்ருதன் ஜெய் நாராயணன், திருப்பூர் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று(அக்., 19) அவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்து, சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கூறியதாவது: கலெக்டர், டி.ஆர்.ஓ., உள்ளிட்ட மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன், அனைத்து வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து பணிபுரிவேன். எனது முழு உழைப்பும், திருப்பூர் பகுதி பொதுமக்கள், தொழில் துறை நலனுக்காக இருக்கும். கல்வியில் மிளிர வேண்டும் என சிறு வயது முதலே பெற்றோர் என்னை ஊக்கப்படுத்தினர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.