'பொன்னியின் செல்வன்' வசூல் ரூ.450 கோடி என அறிவிப்பு : 500ஐத் தொடுமா ?

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி இப்படம் வெளியானாலும் தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்தது. உலக அளவில் படத்தின் வசூல் ரூ.450 கோடியைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் இன்று(அக்., 19) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டப்பிங் ஆன மற்ற மொழிகளில் பெரிய அளவில் இப்படம் வசூலிக்கவில்லை. இதர மாநிலங்களில் கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டும் நல்ல வசூலைக் கொடுத்தது. ஆந்திரா, தெலங்கானா என தெலுங்கு பேசும் மாநிலங்களிலும், வட இந்திய மாநிலங்களிலும் இப்படம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற முடியாமல் போனது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மண்ணின் பெரும் பகுதியை ஆண்ட சோழப் பேரரசின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. ராஜராஜசோழனின் பெருமைகள் என்னென்ன என படக்குழுவினர் வட இந்திய மாநிலங்களில் நிறையவே பேசினார்கள். இருப்பினும் எதிர்பார்த்ததை விடவும் குறைவான வசூலே கிடைத்தது. அங்கெல்லாம் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருந்தால் ஆயிரம் கோடி வசூலையும் கடந்திருக்கும்.

நாளையுடன் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பெரும்பான்மையான தியேட்டர் ஓட்டம் முடிவுக்கு வருகிறது. நாளை மறுதினம் அக்டோபர் 21ம் தேதி 'சர்தார், பிரின்ஸ்' ஆகிய படங்கள் திரைக்கு வருகிறது. எனவே, அதற்குப் பின் குறைவான தியேட்டர்களில்தான் இப்படம் ஓட வேண்டிய சூழ்நிலை. எனவே, ரூ.500 கோடி வசூலைத் தொடுமா என்பது கொஞ்சம் சந்தேகமாகவே உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.