முந்தும் மல்லிகார்ஜுன கார்கே: காங்கிரஸ் தலைவராகிறார்!

அகில இந்திய
காங்கிரஸ்
கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று முன் தினம் நடைபெற்றது. தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 9,915 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,497 பேர் வாக்களித்தனர். அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வாக்குப் பெட்டிகளின் சீல்கள் அகற்றப்பட்டு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலை வகித்து வருகிறார். சுமார் 4500க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று அவர் முன்னனியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மற்றொரு போட்டியாளரான சசி தரூர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதிக உறுப்பினர்களை கொண்ட உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.