காந்திநகர்: காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தடுப்பதற்கான இந்தியாவின் ‘மிஷன் லைஃப்’ என்ற உலகளாவிய செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் எக்டா நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் ஆகியோர் கூட்டாக துவக்கி வைத்துள்ளனர். அடுத்த மாதம் எகிப்தில் ஐ.நா. தலைமையிலான காலநிலை மாநாட்டில் உலக நாடுகள் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக ‘மிஷன் லைஃப்’ என்ற இந்தியாவின் செயல் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராட ஒற்றுமைதான் மிகவும் முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தால் நம் கண் முன்னே பனிமலைகள் உருகி வருகின்றன என்றும் ஆறுகள் வறண்டு வருகின்றன என்றும் கவலையை வெளிப்படுத்திய அவர், இந்த நெருக்கடிகளை சமாளிக்க மிஷன் லைஃப் திட்டம் உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த செயல்திட்டம் பூமியின் நலனில் அக்கறை உள்ள மக்களை ஒன்றிணைக்கும் என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவின் மிஷன் லைஃப் செயல்திட்டத்திற்கு பிரான்ஸ், அர்ஜென்டீனா, மொரீஷியஸ், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். 3 நாட்களாக இந்தியா வந்துள்ள ஐநா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ், இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.