பள்ளி மாணவியின் கைகளால் பூத்துறையில் புதிய நூலகத்தை திறந்து வைத்த விழுப்புரம் ஆட்சியர்: பொதுமக்கள் நெகிழ்ச்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பள்ளி சிறுமியின் கைகளால் புதிய நூலகத்தை திறக்க வைத்த மாவட்ட ஆட்சியர் மோகனின் செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருச்சிற்றம்பலம் பூத்துறை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க மாவட்ட ஆட்சியர் வானூர் பகுதிக்கு வருகை தந்திருந்தார்.

விழுப்புரம் பூத்துறை ஊராட்சியில் ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருந்த நூலகம் பழுதடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் நலன் கருதி கல்வி தவிர்த்து பிற பொது அறிவினை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு அனைவரும் அமர்ந்து படிக்கும் வகையில் கூடுதலான இட வசதியுடன் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக பூத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 6 லட்சம் செலவில் நவீன நூலகம் கட்டி முடிக்கப்பட்டு, அதனை திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அங்கு வருகை தந்திருந்தார். அப்பொழுது நூலகத்தை மாவட்ட ஆட்சியர் ரிப்பன் வெட்டி திறப்பதாக இருந்த நிலையில், இந்த நூலகம் மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டது.

பள்ளி மாணவர்கள் திறந்தால் தான் சிறப்பாக இருக்கும் என கூறிய மாவட்ட ஆட்சியர், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவியை வைத்து அந்த நூலக கட்டிடத்தை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் அனைவரிடத்திலும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.