மும்பை: மும்பையில் 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என தொலைபேசி மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரங்களில் மக்கள் அதிகம் இருக்கக்கூடிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என தொலைபேசி வழியேயான அழைப்பில் மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மும்பை போலீசார் கூறுகையில், ‘மும்பை பெருநகரில் அந்தேரியில் உள்ள இன்பினிட்டி மால், ஜுகுவில் உள்ள பிவிஆர் மால் மற்றும் விமான நிலைய சகாரா ஓட்டல் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என தொலைபேசி வழியாக போலீசாருக்கு மிரட்டல் தகவல் வந்துள்ளது.
அந்த நபரை கண்டறியும் பணியில் பாதுகாப்பு முகமைகள் ஈடுபட்டுள்ளன’ என தெரிவித்தனர். மும்பையில் 2008-ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம் இன்னும் ஒரு சில நாட்களில் வர உள்ள நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.