எல்லை பகுதி கிராமம் இந்தியாவின் முதன்மை கிராமம்: பிரதமர் மோடி பேச்சு!

எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒவ்வொரு கிராமமும், இந்தியாவின் முதன்மையான கிராமமாக கருதப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை, கேதார்நாத் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலுக்குச் சென்ற அவர், அங்கு சுவாமி தரிசனம் செய்தார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி கோவிலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதன் பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மணா கிராமம், இந்தியாவின் கடைசி கிராமமாக கருதப்பட்டது. ஆனால், என்னை பொறுத்தவரை, இனி மேல், எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒவ்வொரு கிராமமும், இந்தியாவின் முதன்மையான கிராமமாக கருதப்படும்.

கேதார்நாத், பத்ரிநாத்தில் உள்ளதை கவுரவமாகவும், அதிர்ஷ்டமாகவும் கருதுகிறேன். கேதார்நாத்தில் அமைக்கப்படும் ரோப் கார் திட்டம் யாத்ரீகர்களின் பயண நேரத்தை குறைக்கும். கேதார்நாத்தில் கடவுள் சிவனின் ஆசி பெற்றேன். உத்தராகண்டில் கடந்த ஆண்டில் பணியாற்றி உள்ளேன்.

கவுரிகுண்ட் முதல் கேதர்நாத் வரையிலும், கோவிந்த் கட் முதல் ஹேம்குண்ட் சாஹிப் வரையிலுமான ரோப்கார் திட்டம் காரணமாக வளர்ச்சி திட்டங்களுக்கு ஊக்கம் கொடுக்கும். முந்தைய அரசுகள் தங்கள் சுயநலத்திற்காக பணியாற்றின.

இந்தியாவானது, அடிமை மனநிலையில் சிக்கி தவித்தது. முந்தைய அரசுகளும் , இந்தியாவை அடிமை தனத்தில் சிக்க வைத்தன. பாஜக ஆட்சியில் அடிமை மனநிலையில் இருந்து இந்தியாவுக்கு விடுதலை கிடைத்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா பயணிகளும், உள்நாட்டு பொருட்களை வாங்க 5 சதவீதம் செலவழிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.