ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்; விஷவாயு தாக்கி மூவர் பலி!

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்குச் சொந்தமான விடுதி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் கச்சிப்பட்டு கீழாண்டை தெருவைச் சேர்ந்த ரங்கநாதன், நவீன்குமார், திருமலை ஆகியோர் இன்று (21.10.2022) ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கி மூவர் பலி

சுத்தம் செய்யும்போது கழிவுநீர் தொட்டியிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கியதில், இந்த மூவருமே கழிவுநீர் தொட்டியில் விழுந்திருக்கிறார்கள். வேலை செய்துகொண்டிருந்தவர்களைக் காணவில்லை என்று இது தொடர்பாக, விடுதி ஊழியர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கயிறு கட்டி கழிவுநீர் தொட்டியில் இறங்கி மூவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

30 அடி ஆழம், 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்த மூவரையும் தேடும் பணி பல மணிநேரம் தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து கழிவுநீர் தொட்டியிலுள்ள நீரை அகற்றிவிட்டு ரங்கநாதன், நவீன்குமார், திருமலை ஆகியோரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் பகுதி போலீஸார் மூவரின் உடல்களைக் கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

ஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கி மூவர் பலி

உயிரிழந்த திருமலைக்கு 18 வயது என்பதும், அவருக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனதும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, விடுதி உரிமையாளர், மேலாளர், ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. தொடர்ந்து, விடுதியின் மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி கைதுசெய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள்மீது, ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.