பள்ளிப்பட்டு: மழைநீர் வரத்து அதிகரிப்பால், எரும்பி ஏரி உள்பட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் கால்வாய்கள் மூலம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் போதிய நீராதாரங்கள் இன்றி, விளைநிலங்கள் வறண்ட பகுதியாக காட்சியளித்து வந்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே, ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள எரும்பி ஏரி உள்பட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகிறது.
இங்கு பொதுப்பணி துறைக்கு சொந்தமான எரும்பி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அங்கிருந்து கால்வாய்கள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர்நிலைகளை காண குடும்பத்துடன் ஏராளமான குவிந்துள்ளனர். சிலர் நீர்நிலைகளில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் நெல் சாகுபடி வளர்ச்சி அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.