சூரிய கிரகணம்… எத்தனை மணிக்கு? நம்மால பார்க்க முடியுமா? கண் பார்வை பாதிக்குமா?

நடப்பாண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று (அக்டோபர் 25) தான். இதற்கு முன்பாக ஏப்ரல் 30ஆம் தேதி சூரிய கிரகணம் தோன்றியது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் நிலவு வரும் போது சூரியன் நம் பார்வையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்படும். இதனையே சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம். இன்றைய தினம் சூரியன் மறைவதற்கு சற்று முன்னதாக கிரகணம் நிகழ்கிறது.

ஒவ்வொரு நகரங்களிலும் வெவ்வேறு நேரங்களில் கிரகணம் காட்சியளிக்கும். இதனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால் ரெட்டினா நிரந்தரமாக பாதிக்கும் சூழல் ஏற்படும். ஏனெனில் அதிகப்படியான கதிர்வீச்சு வெளிப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே டெலஸ்கோப், பின்ஹோல் கேமரா அல்லது சிறப்பு கேமராக்கள் மூலம் மட்டுமே பார்க்க வேண்டும்.

இந்திய நகரங்களில் எந்தெந்த நேரங்களில், எவ்வளவு நேரம் சூரிய கிரகணத்தை பார்க்கலாம் என்று பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அலகாபாத் மாலை 4.40 மணி, அமிர்தசரஸ் 4.20, பெங்களூரு 5.12, போபால் 4.42, சண்டிகர் 4.23, கொச்சின் 5.22, கட்டாக் 4.56, டார்ஜிலிங் 4.41, டெல்லி 4.29, காந்தி நகர் 4.38, கவுகாத்தி 4.45, ஹைதராபாத் 4.59, ஜெய்ப்பூர் 4.32, ஜம்மு 4.17, கொல்கத்தா 4.52, கோழிக்கோடு 5.17, லக்னோ 4.36, மங்களூரு 5.10 ஆகிய நேரங்களில் பார்க்கலாம்.

கிரகணம் தென்படும் நேரப் பட்டியல்

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை 5.14, கன்னியாகுமரி 5.32, மதுரை 5.10 ஆகிய நேரங்களில் கிரகணத்தை பார்க்கலாம். சில இடங்களில் ஒரு மணி நேரம் 45 நிமிடங்களும், சில இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு குறைவாகவே தென்படும் எனக் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் கிரகணத்தை பார்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரகணத்தின் போது பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில்கள் அனைத்தும் கிரகண நேரத்தில் மூடப்பட்டிருக்கும். குறிப்பாக திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா திருக்கோயில் இன்று காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்பட்டுள்ளது. அதன்பிறகு கோயில் நடை திறக்கப்பட்டு முழுவதும் சுத்தம் செய்த பின்னரே ஏழுமலையான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

அதுவும் சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை ஒட்டி ஒடிசாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.