மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகரான அந்தேரியில் வசிப்பவர் பூஜா ஷா(49). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆன்லைன் புட் டெலிவரி ஆப் மூலம் இனிப்பு ஆர்டர் செய்துள்ளார். இதற்காக ஆன்லைனில் ஆயிரம் ரூபாய் செலுத்த முயன்றுள்ளார். ஆனால் பண பரிவர்த்தனை தோல்வியடைந்துள்ளது.
இதையடுத்து பூஜா, சம்பந்தப்பட்ட இனிப்பு கடையின் எண்ணைக் கண்டுபிடித்து போன் செய்து தொடர்பு கொண்டார். பண பரிவர்த்தனை ஆகவில்லை என கடைக்காரரிடம் கூறியதை அடுத்து, பூஜாவிடம் இருந்து அந்த நபர் கிரெடிட் கார்டு மற்றும் ஓடிபி விவரங்களை பெற்றுள்ளார்.
பூஜா தனது விவரங்களை கொடுத்த அடுத்த நொடியில், அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.4 லட்சம் எடுத்து மோசடி செய்துள்ளனர். தனது பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த பூஜா, ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார், ரூ.2,27,205 மாற்றப்படுவதை தடுத்து பணத்தை மீட்டனர்.