7 ஆண்டுகளாக காதலித்து வந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களுடைய படங்களில் பிஸியாக இருந்தனர்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் இரட்டைக் குழந்தைக்கு பெற்றோரானோம் எனக் கூறி புகைப்படந்தையும் பகிர்ந்தார். திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், அதற்குள் எப்படி என்ற கேள்வி எழுந்த நிலையில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது தெரிய வந்தது.
இதையடுத்து சட்ட விதிகளுக்கு புறம்பாக இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக சர்ச்சை வெடித்து போலீசில் புகார் அளிக்கும் அளவிற்கு நிலைமை சென்றது. இந்நிலையில், நயன்தாராவின் வாடகை தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை சமீபத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் அமைத்தார்.
இந்த குழுவின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி ICMR வழிகாட்டு முறைகளின்படியே இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர் என சுகாதாரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பதிவு திருமணம் நடைபெற்றது எப்போது, வாடகைத்தாய் ஒப்பந்தம்போடப்பட்டது எப்போது என்ற விவரத்தையெல்லாம் அரசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதில், ”11.3.2016ல் இந்த தம்பதியருக்கு பதிவு திருமணம் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. திருமண பதிவு உண்மைத் தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2020 மாதத்தில் சினை முட்டை மற்றும் விந்தணு பெறப்பட்டு கருமுட்டைகள் உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டு, நவம்பர் 2021 மாதத்தில் வாடகத்தாய் ஒப்பந்தம் போடப்பட்டது. மார்ச் 2022 இல் கருமுட்டைகள் வாடகை தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு அக்டோபர் மாதம் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன. கருக்கள் வளர்ந்த நிலையில் இரட்டைக் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் 9 அக்டோபர் அன்று தம்பதியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளனர்