நான்தான் தனுஷ்… தனுஷ் தான் நான்… : நெகிழும் சிவராஜ்குமார்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவராஜ்குமார். இவர் தற்போது முதல்முறையாக தமிழிலும் நடிப்பதற்காக அடியெடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாவிட்டாலும், தனது பேட்டி ஒன்றில் இந்த தகவலை சிவராஜ்குமாரே வெளியிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார் சிவராஜ்குமார். இதுகுறித்து ஏற்கனவே யூகமான தகவல்கள் வெளியான நிலையில் அது உண்மைதான் என்பதை தற்போது பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார் சிவராஜ்குமார்.

இதுபற்றி அவர் கூறும்போது, 'அருண் மாதேஸ்வரன் பெங்களூருக்கு வந்து என்னிடம் இந்த கதை பற்றி 40 நிமிடங்கள் விரிவாக பேசினார். அந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. அது மட்டுமல்ல நான் தனுஷின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய எல்லாப் படங்களையும் பார்த்துள்ளேன். சொல்லப்போனால் தனுஷில் என்னை நான் பார்க்கிறேன். அவரது அந்த குறும்புத்தனம், நண்பர்களிடம் அவர் நடந்து கொள்வது எல்லாம் பார்க்கும்போது அவர் தான் நான்.. நான் தான் அவர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அதனால் அவர் மீது எனக்கு தனியாக ஒரு விருப்பம் எப்போதுமே இருக்கிறது. அந்த வகையில் இப்படி தனுஷ் உடன் இணைந்து நடிக்க தேடி வந்த அந்த வாய்ப்பை நான் தவறவிட விரும்பவில்லை. இந்த படம் வெளியாகும்போது தனுஷுக்கும் எனக்குமான பிணைப்பை ரசிகர்கள் நிச்சயமாக புரிந்து கொள்வார்கள்” என்று கூறியுள்ளார் சிவராஜ்குமார்.

இதற்கு முன்னதாக கடந்த 2015ல் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த வஜ்ராகயா என்கிற படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.