மத்தியில் ஆளும் பாஜக அரசு நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தி, எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மத்திய பாஜக அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்தி எரிபொருட்களின் விலையை குறைத்துள்ளது. அந்தவகையில், பாஜக ஆளும் மாநிலங்களில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விலை குறைக்கப்படவில்லை.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அவர்களால் அதனை செய்ய முடியவில்லை. பொய்யான வாக்குறுதிகளை தான் அவர்கள் அளிக்கிறார்கள்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது ஊழல்களைப் பற்றி பேசக்கூடாது என்பதற்காக புதிய பிரச்சனைகளை கிளப்புகிறார். நீங்கள் (கெஜ்ரிவால்) டெல்லியில் உள்ள இஸ்லாமிய மத குருக்களுக்கு ஆண்டுக்கு ரூ.18,000 வழங்கி வருகிறீர்கள். அதேபோல பாதிரியார்கள், குருத்வாரா கிராந்திகள், போதகர்கள் ஆகியோருக்கு ரூ.18,000 வழங்குவீர்களா..?. உங்களால் ஏன் முடியவில்லை..?” என்று அவர் தெரிவித்தார்.