பேருந்து நிறுத்தத்தில் தாலி கட்டிய விவகாரத்தில் போலீசாரின் செயலுக்கு நீதிமன்றம் அதிருப்தி..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கிராமப் பகுதிகளுக்கு செல்லும் மினி பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் ஒன்றில் பள்ளிக்கூட சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்க்கு சீருடையில் இருக்கும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் ஒருவன் மஞ்சள் கயிறு தாலி கட்டியுள்ளார்.

இதனை உடன் இருந்த மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், கட்டுயா… கட்டுயா என்று கூற.. மாணவனும் மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். அப்போது பூவிற்கு பதிலாக காகிதங்களை கிழித்து இருவர் மீதும் வீசியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து கடந்த மாதம் 10-ம் தேதி இதுதொடர்பாக அந்த மாணவனுக்கு எதிராக சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, மாணவியின் வீட்டுக்குச் சென்று அவரை அழைத்துக் கொண்டு சென்று அரசு காப்பகத்தில் சேர்த்தது.

தனது மகளை குழந்தைகள் நலக்குழுவினர் எதற்காக அழைத்துச் சென்றனர் எனத் தெரியவில்லை எனக் கூறி, அவரை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க கோரி மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, மாணவியை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக கூறி அவரை உடனடியாக விடுவித்து பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து, மாணவியை விடுவித்து தாயிடம் ஒப்படைத்து விட்டதாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், முழுமையாக விசாரணை நடத்தாமல் அவசர கதியில் மாணவியை அரசு காப்பகத்தில் தங்க வைத்த குழந்தைகள் நலக்குழு மற்றும் மாணவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் செயல் குறித்தும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிதம்பரம் நகர போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.