ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள், விட்டுச்சென்ற பெற்றோர்; வளர்த்தெடுக்க முன்வந்த மாவட்ட நிர்வாகம்!

சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் சேலத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த மாதம் 20-ம் தேதி பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகள் மிகவும் எடை குறைவாக இருந்ததால் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். குழந்தைகளின் தாயும் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் திடீரென குழந்தையின் பெற்றோர், `எங்களுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக, எங்களால் மூன்று பெண் குழந்தைகளையும் வளர்த்தெடுக்க முடியாது. பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டத்தில் இருந்து வருகிறோம். மூன்று பெண் குழந்தைகளையும் பராமரிப்பது என்பது மிகவும் கஷ்டம் என்பதால் நீங்களே பராமரித்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு இக்குழந்தைகள் வேண்டாம்’ என மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், பெற்றோரிடம் குழந்தைகளின் நிலைகளை எடுத்துக்கூறி, அவர்களை வளர்க்குமாறு கூறியும் அவர்கள் சிறிதும் மனம் மாறவில்லை. இதனால் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மூன்று பெண் குழந்தைகளையும் கடந்த 15 நாள்களாக பராமரித்து வந்தனர். மூன்று பெண் குழந்தைகளும் ஓரளவு எடை கூடிய பிறகு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பெண் குழந்தைகளும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் முன்னிலையில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரியிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டனர்.

இது குறித்து மருத்துவர்கள் தரப்பில் பேசியபோது,“தற்போது மூன்று பெண் குழந்தைகளும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 60 நாள்களுக்கு குழந்தைகளை பராமரித்து வருவார்கள். அந்த நேரத்தில் பெற்றோர் மனது மாறி திரும்பி வந்தால் குழந்தைகள் அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுவார்கள். வராத பட்சத்தில் மூன்று குழந்தைகளையும் தத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.