பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு 6 ஆண்டாகியும் ரூ. 30.88 லட்சம் கோடி மக்களிடம் புழக்கம்: 2016ம் ஆண்டை விட 71.84% அதிகரிப்பு

புதுடெல்லி: பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு 6 ஆண்டுகளான பிறகும், மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு ரூ.30.88 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2016ல் இருந்ததை விட 71.84 சதவீதம் அதிகம். நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை கடந்த 2016ம் ஆண்டு நவம்பவர் 8ம் தேதி வாபஸ் பெறுவதாக (பணமதிப்பிழப்பு) பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். ஊழல், கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த பணமதிப்பிழப்பு செயல்படுவத்துவதாக அவர் அறிவித்தார்.

மேலும், மக்களிடம் பணப் புழக்கத்தை குறைத்து, வங்கி பரிமாற்றத்தை  அதிகரிக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால், இந்த நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை. பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு நாளையுடன் 6 ஆண்டுகள் முடியும் நிலையில், பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ. 30.88 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது, பணமதிப்பிழப்புக்கு முன்பாக 2016, நவம்பர் 4ம் தேதி புழக்கத்தில் இருந்த பணத்தை விட 71.84 சதவீதம் அதிகமாகும்.

பண விநியோகம் தொடர்பான ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த அக்டோபர் 21ம் தேதியன்று பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு ரூ. 30.88 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2016, நவ. 4ம் தேதியன்று இது ரூ. 17.7 லட்சம் கோடியாக இருந்தது,’ என்று கூறப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, மக்களிடம் டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்யும் மனப்பான்மை அதிகமாகி இருக்கிறது. அதே நேரம், அவர்கள் புழக்கத்தில் வைத்துள்ள பணம், நாணயங்களின் மதிப்பும் அதிகமாக இருப்பதும் தற்போது உறுதியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.