நடமாடும் மருத்துவமனைகள்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழைக்கால நோய்களில் இருந்து மக்களை காக்க நடமாடும் மருத்துவமனைகள் அமைக்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் தற்பொழுது வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளது. பரவலாக தமிழகமெங்கும் மழை பெய்து வருகிறது. இந்த மழைக் காலத்தில் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மழைக் காலங்களில் மலேரியா, டெங்கு, காலரா, சிக்கன் குன்யா, சளி, இருமல், காய்ச்சல் மற்றும் ‘மெட்ராஸ் ஐ’ என்று சொல்லக் கூடிய கண் நோய்கள் ஏற்பட வாய்புள்ளது. அவற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளிலும் தேவையான மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டும்.

மேலும், குடிநீருடன் மாசுப்பட்ட நீர் கலப்பதால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் வசதிக்காக நடமாடும் மருத்துவமனைகளையும், மருத்துவ முகாம்களையும் ஏற்படுத்தி மழைக் காலங்களில் மக்களை நோயில் இருந்து காக்க கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.