புதுச்சேரி: புதுச்சேரி தீயணைப்புத் துறையில் முதல் முறையாக நிலைய அதிகாரி உட்பட 18 இடங்களை ஒதுக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புதல் தந்துள்ளார்.
புதுவையில் 1,060 அரசு பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. தீயணைப்புத் துறையில் 58 வீரர்கள், 12 டிரைவர்கள், 5 நிலைய அதிகாரி என மொத்தம் 75 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அனைத்து துறையிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில் தீயணைப்பு துறையில் மட்டும் வாய்ப்புகள் தரப்படுவதில்லை. எனவே, பெண்களுக்கும் தீயணைப்பு துறையில் வாய்ப்பு தர வேண்டும் என முதல்வர் ரங்கசாமியிடம் அமைச்சர் சாய்சரவணக்குமார் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து முதல்வர் ரங்கசாமி ஒரு நிலைய அதிகாரி, 17 வீரர்கள் என மொத்தம் 18 இடங்களை பெண்களுக்கு ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், புதுவையில் முதல் முறையாக தீயணைப்பு துறையில் பெண் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.