இந்தியாவில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (12) நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இது 5.4ஆக ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. இன்று இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டன. இதனால் சத்தம் கேட்டு அலறி அடித்து வீடுகளில் இருந்து வெளியேறினர். கதவுகள், ஜன்னல்கள் ஆடியது தொடர்பான வீடியோக்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத்தில் 54 நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 1 நிமிடத்திற்கு நீடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகளில் உறங்கி கொண்டிருந்த மக்கள் பலரின் மீது கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கமானது டெல்லி மற்றும் உத்தரகாண்டில் உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.