ட்ரிப்பர் என்டர்டெயின்மென்ட் சார்பில் மதுசூதனன் தயாரிப்பில் பரோல் படம் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கசக்குதையா படத்தை இயக்கிய துவாரக் ராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார். பரோல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லிங்கா மற்றும் ஆர்எஸ் கார்த்திக் நடித்துள்ளனர். பரோல் படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவரும் புதுமுகங்களே. படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்து இந்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டது.
அண்ணன் லிங்கா மற்றும் தம்பி கார்த்திக் இருவரும் அடிக்கடி சண்டை இட்டுக்கொள்ளும் அண்ணன் தம்பிகளாக உள்ளனர். லிங்கா முக்கிய குற்றவாளியாக சிறையில் உள்ளார், இவரது அம்மா எதிர்பாராத விதமாக இறந்துவிட தம்பி கார்த்திக் அண்ணனை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறார். இதில் அவருக்கு பரோல் கிடைத்ததா? இல்லையா? என்பதே பரோல் படத்தின் கதை. கார்த்திக் மற்றும் லிங்கா இருவருக்கும் சமமான முக்கியத்துவம் வாய்ந்த கதையாக பரோல் படம் உள்ளது. அதனை சரியாக பயன்படுத்தி இருவரும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இரண்டு பெண் கதாபாத்திரங்களும், படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் முக்கியதும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பரோல் கிடைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை உண்மைக்கு சற்று விலகாமல் கதையிலும் புகுத்தி உள்ளார் இயக்குனர் துவாரக் ராஜா. படத்தில் திரைக்கதை பரோல் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. வடசென்னை மையமாக வைத்து பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருந்தாலும் பரோல் படம் அதில் தனித்துவமான உள்ளது. ஆக்சன் காட்சிகளும் சரி, சென்டிமென்ட் காட்சிகளும் சரி சிறப்பான முறையில் திரையில் காட்டப்பட்டுள்ளது. நான் லீனியர் முறையில் சொல்லப்பட்டிருக்கும் இந்த கதையை ரசிகர்களுக்கு புரியும் படி எடுத்துள்ளார் இயக்குனர், இப்படி பட்ட கதையை சரியான சரியான முறையில் எடிட் செய்த எடிட்டருக்கும் தனி பாராட்டுக்கள்.
படத்தின் கேமரா ஒர்க், பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது. செட் ஒர்க் இல்லாமல் நேரடியாக களத்தில் இறங்கி படத்தை எடுத்துள்ளனர். கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளில் வரும் ஹியூமர் பல இடங்களில் நன்றாக வொர்க் ஆகியுள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் சண்டை காட்சி பிரமாதம். படத்தின் பட்ஜெட் கருதி சில காட்சிகளை தேவைக்கு ஏற்றார் போல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவை கதைக்கு எந்தவித தொய்வையும் ஏற்படுத்தவில்லை. அண்ணன் தம்பிக்கு இடையே நடக்கும் சண்டை பலருக்கும் ஒத்து போகும்.