தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கிருஷ்ணா. 79 வயதாகும் நடிகர் கிருஷ்ணா, 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையான கிருஷ்ணா, நேற்று நள்ளிரவில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது.
தற்போது அவர், தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார். அத்துடன், செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.