ஜெயலலிதா செருப்பு ஏலம் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடக் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்ற தகவல் பெறும் மேல்முறையீட்டு அதிகார வரம்பு ஆணையம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு தனி நீதிமன்றம். 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை கர்நாடகா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனி நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இந்த தீர்ப்புக்கு முன்பாகவே ஜெயலலிதா இறந்தார். அதனால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது.

ஆனால் சசிகலா உள்பட மற்ற மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் முடிந்து, 2 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் விடுதலையாகினர். இந்நிலையில் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, ‘ஜெயலலிதாவின் பொருட்களில் குறிப்பாக 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள், 250 சால்வைகள் நீண்ட நாட்களாக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளதால், அவை நாசமாகி விடும். எனவே, அவற்றை ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும்,’ என உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் அனுப்பினார்.

அந்த கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வழங்கும்படியும் அவர் கோரினார். அவற்றுக்கு ஒன்றிய தகவல் ஆணையம் உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பி, தனக்கு உரிய தகவலை வழங்கும்படி ஒன்றிய தகவல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு கோரினார். இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் செயல்படும் தகவல் மேல்முறையீட்டு அதிகார ஆணைய அலுவலகத்தில் நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடும்படி நரசிம்ம மூர்த்தி வலியறுத்தினார். வாதங்களை கேட்ட ஆணையம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.