வேலூர் சத்துவாச்சாரி மாருதி நகரில் பாதியில் நிறுத்திய சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி மாருதி நகரில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை திட்ட பணியால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி 2வது மண்டலம் மாருதி நகரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்த பகுதியில் கடந்த ஆண்டு பாதாள சாக்கடை திட்ட பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து முடிந்துள்ளது.

தற்போது சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. 13வது கிராஸ் சாலையில் ஒரு பகுதியில் மட்டும் பணிகள் நடந்த நிலையில், திடீரென சாலை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் சாலையின் ஓரத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இந்த சாலையில்தான் தினந்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர்.

மழைக்காலம் தொடங்கி உள்ளதால் மழைநீரும் தேங்கி சேறும் சகதியாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.