குமரி: திடீரென பச்சை நிறமாக மாறிய அரபிக்கடல்! மீன்கள் உயிரிழந்து விடும் அபாயம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீரென பச்சை நிறமாக மாறி காட்சியளிக்கிறது அரபிக்கடல். மணவாளக்குறிச்சி முதல் பெரியவிளை வரையிலான கடல்பகுதி பச்சை நிறமாக மாறி துர்நாற்றமும் வீசுவதால், மீன்கள் உயிரிழக்க கூடும் என மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
பொதுவாக கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு அரபிக்கடல் ஆழ்கடல் பகுதி என்பதால் மற்ற கடல் பகுதிகளை விட கடல் அலைகள் சற்று சீற்றமாகவே காணப்படும். தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இந்த பகுதியில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படுகிறது.
image
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு அரபிக்கடல் பகுதியான மணவாளக்குறிச்சி முதல் பெரியவிளை வரையிலான கடல் பகுதியில், திடீரென கடல் நீர் பச்சை நிறமாக காட்சியளிப்பதோடு, வழக்கத்திற்கு மாறாக துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் மீன்கள் உயிரிழக்கக்கூடும் என மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் எழும்பும் கடல் அலைகள், தற்போது பச்சை நிறத்தில் காணப்படுவதோடு, நுரையுடன் கரையில் மோதி செல்கிறது.
image
பொதுவாக கடலில் உள்ள பூங்கோரை பாசிகளால் கடல் நீர் பச்சை நிறமாக காட்சியளிக்கும் என்றும், இதனால் சிறிய வகை மீன்களின் செதில்கள் பாதிப்படைந்து உயிரிழக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அரபிக்கடல் போன்ற ஆழ்கடல் பகுதிகளில், இது போன்ற பாசிகள் வர அதிக வாய்ப்புகள் இல்லை என்பதால், தற்போது அரபிக்கடல் பகுதியில் கடல் நீர் பச்சை நிறமாக மாற பூங்கோரை பாசிகள் தான் காரணமா, இல்லை வேறு ஏதும் ரசாயண கழிவுகள் காரணமா என மீன்வளத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.