உலக குழந்தைகள் தினம்| Dinamalar

உலக நாடுகள் குழந்தைகள் தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடுகின்றன.இருந்தாலும் சர்வதேச குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20-ந்தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

1954-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி, ஐ.நா.,குழந்தைகளுக்கிடையேயான சகோதரத்துவம் மற்றும் புரிதலை மேம்படுத்தும் வகையிலும் குழந்தைகளின் நலனுக்காக ஐ.நா., சபையின் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் சர்வதேச குழந்தைகள் தினத்தை கடைபிடிக்கும் படி உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது. இதனை தொடர்ந்து 1959-ம் ஆண்டு குழந்தைகளின் உரிமைகளுக்கான பிரகடனம் செய்த நாள் மற்றும் 1989-ம் ஆண்டு குழந்தைகளின் உரிமைகளுக்கான மாநாடு நடத்தப்பட்ட நாளான நவம்பர் 20-ந்தேதியை சர்வதேச குழந்தைகள் தினமாக ஐ.நா., சபை ஏற்றுக்கொண்டது.

குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தவும், துஷ்பிரயோகம், சுரண்டல், பாகுபாடு போன்ற வடிவங்களில் வன்முறையை அனுபவிக்கும் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொழிலாளர்களாக தள்ளப்படும் குழந்தைகளை மீட்டெடுக்கவும் இந்த குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் கூர்மையாக கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு எப்படியெல்லாம் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும், எப்படி போதிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த சிறப்பான அணுகுமுறையானது குழந்தைகளின் நாளைய ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கு அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.