இன்று திருச்சியில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் 24-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது;- “வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்.
ஏனெனில், வேலைக்குச் சென்ற இடத்தில் தவறான வேலைகளை செய்வதற்கு வற்புறுத்தப்படுவதால்தான், அவர்கள் அந்த வேலையை விட்டு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அதன் அடிப்படையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அறுபத்து நான்கு நபர்களை கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மீட்டு வந்துள்ளோம். அங்கே வேலை தேடி சென்று பல இன்னல்களுக்கு ஆளான அவர்களுக்காக விமான கட்டணத்திலிருந்து அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொண்டது.
மேலும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டுவதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.