சுதந்திரமாக பயணம் செய்வது என்பது அடிப்படை உரிமை. வளர்ந்த நாடுகளில் சுங்கச் சாலைகள் மற்றும் சுங்க கட்டணம் அல்லாத சாலைகள் போன்றவற்றை தேர்தெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நமது நாட்டில் மாநிலங்களின் முக்கிய சாலைகள் அனைத்தும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் எடுக்கப்பட்டு சுங்க கட்டண சாலைகளாக மாற்றப்பட்டு மக்கள் வலுக்கட்டாயமாக சுங்க கட்டணம் செலுத்தும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சுங்கச்சாவடிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அன்றாடம் சாலைகளை பயன்படுத்த வேண்டியுள்ள நிலையில், மாதாந்திர அனுமதி அட்டைகளுக்கான கட்டணங்களும் அதிகமாக உள்ளது.
இந்த சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஆண்டுதோறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தி வருகிறது. இதனால் நடுத்தர மக்களும், ஏழை மக்களும், வணிகர்களும், கனரக வாகன ஓட்டிகள் என பலதரப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்
இந்நிலையில் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் எம்பி வில்சனுக்கு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து திமுக எம்பி வில்சன் தனது ட்விட்டர் பதிவில், “நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக வாகனப்பதிவின் போதே ஒரு முறை சிறிய கட்டணமாக வசூலிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன்.
அதற்கு தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார். அதில், நெடுஞ்சாலைககளில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்கச்சாவடி கட்டணமானது, பொது நிதியுதவி திட்டங்களில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40% வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.