தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் கஸ்தூரிபா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் இருந்து திடீரென ரசாயன வாயு கசிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மூச்சு திணறலில் 25 மாணவிகள் மயக்கம் அடைந்துள்ளனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மாணவர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரசாயன வாயு கசிந்தது தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் ரத்த வாந்தி எடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஆய்வகத்தில் கசிந்தது என்ன வாயு? என இதுவரை தெரியவில்லை. விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய, தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய மருத்துவர், “குறைந்தது 25 முதல் 30 மாணவிகள் மூச்சு விடுவதில் சிரமத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேருக்கு தாக்கம் அதிகமாகி உள்ளதால் தொடர்ந்து மருத்தவர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். மீதமுள்ள மாணவிகள் முதலுதவி பெற்று வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.