நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் மாதம் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, இந்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நடப்பு ஆண்டில் வருகிற டிசம்பர் மாதம் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறும்.
இந்த குளிர்கால கூட்டத்தொடரில் மொத்தம் 17 பணி நாட்கள் இருக்கும். அமுத கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விவாதங்கள் இருக்கும். ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தொடரின் முதல் நாள், உறுப்பினர்களின் மறைவையொட்டி ஒத்தி வைக்கப்படும் என பார்க்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை குறைந்த சூழலில், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முழு அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்ட நிலையில், பெரிய அளவில் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.