செங்கோட்டையன் பாலிடிக்ஸ்; எடப்பாடி ஷாக்.. ஓபிஎஸ் ஹேப்பி!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர்

பண்ணை வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள் சாரை சாரையாக வந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர் எம்.பி தலைமையில் 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்ஐ நேரில் சந்தித்து சால்வை அணிவித்தும், மலர் கொத்துகள் கொடுத்தும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஈரோடு சிறுவலூர் மேற்கு மாவட்ட செயலாளர் மாரப்பன் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட 11 நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ்சை நேரில் சந்தித்து பூங்கொத்துகள் கொடுத்து, ஆதரவை தெரிவித்தனர்.

தன்னை வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்த கட்சி பொறுப்பாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஓபிஎஸ் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது அதிமுக ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரண்டு பிரிவுகளாக இருந்து வரும் சூழ்நிலையில் தற்போது அதிமுகவினர் ஓபிஎஸ்சை அதிக அளவில் சந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து அதிமுகவினர் கூறியதாவது:

தற்போது ஓபிஎஸ் அவர்களுக்கு அதிகளவில் ஆதரவு பெருகி வருகிறது. புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ள நிலையில் அடுத்த கட்டமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஓபிஎஸ் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதனால் மீண்டும் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்பார் என்பது உறுதியாகி வருகிறது. ஈபிஎஸ்ஐ எதிர்த்து ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்க வந்து இருக்கிறோம்.

எங்களை எல்லாம் எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிட மாட்டார் என்று நம்புகிறோம். கட்சியை வலுப்படுத்துவதற்காக நாங்கள் ஓபிஎஸ் உடன் இணைந்து சரித்திரம் படைக்க இருக்கிறோம். இவ்வாறு அதிமுக தொண்டர்கள் கூறினர்.

இதை தொடர்ந்து ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாளர் மாரப்பன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

கடந்த 1989ம் ஆண்டு ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிட்டதில் இருந்து நாங்கள் கட்சியில் இருக்கிறோம். அன்றையில் இருந்து செங்கோட்டையன் உடன் தீவிரமாக கட்சி பணியில் ஈடுபட்டு வந்தோம்.

ஒருங்கிணைப்பாளர் தர்மயுத்தம் நடத்தும் பொழுது இருந்தே நாங்கள் ஓபிஎஸ் உடன் இருக்கிறோம். இதனாலேயே செங்கோட்டையன் எங்களை கட்டம் கட்டி உருப்பட வைக்கவில்லை.

எங்கள் எல்லோரையும் பாதிக்கப்பட வைத்துள்ளார். இதனால் ஓபிஎஸ்சை நம்பி நாங்கள் இறங்கி செயல்பட்டு இருக்கிறோம். கோபிசெட்டிபாளையம், பவானி ஒன்றிய, நகர நிர்வாகிகளை நியமித்து நிச்சயமாக ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கோட்டையாக இரண்டு தொகுதிகளையும் மாற்றுவோம். இவ்வாறு ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாளர் மாரப்பன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.