நாட்டின் வளர்ச்சிக்காக நாள் முழுவதும் உழைக்கிறேன்: அருணாச்சலத்தில் மோடி உருக்கம்

இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் முதல் முதலாக புதிதாக கட்டப்பட்ட டோன்யி போலோ பசுமை விமான நிலையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அருணாச்சல பிரதேசத்தில் விமான நிலையம் இல்லாத நிலையில், ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.645 கோடி செலவில், பசுமை விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விமான நிலையத்துக்கு, ‘டோன்யி போலோ’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாநில தலைநகர் இடாநகரில் இருந்து 15 கிமீ தொலைவில் இந்த விமான நிைலயம் அமைந்துள்ளது. இதேபோல், ரூ.8,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 600 மெகா வாட் திறன் கொண்ட நீர்மின் நிலையத்தையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

விழாவில் மோடி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்காக 365 நாளும், 24/7 மணி நேரமும் ஒன்றிய அரசு பாடுபட்டு வருகிறது. 2019ல் விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டியபோது தேர்தல் காரணத்துக்காக செய்யப்படுவதாக எதிர்கட்சிகள் விமர்சித்தன. ஆனால், தேர்தல் இல்லாத நிலையில் விமான நிலையத்தை தொடங்கியுள்ளோம்.  நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த வடகிழக்கு மாநிலம் இன்று வளர்ச்சியடையும் போது முன்னுரிமை அளிக்கப்படுகிறது. புதிய விமான நிலையம் மூலமாக 20 லட்சம் மக்களுக்கு சேவை அளிக்க முடியும். நாடு முன்னேற வேண்டும் என்பதற்காக நான் நாள் முழுவதும் உழைக்கின்றேன். தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக செயல்படவில்லை. காலையில் அருணாசலப்பிரதேசத்தில் இருக்கும் நான் மாலையில் நாட்டின் மறுமுனையில் உள்ள குஜராத்தில் இருப்பேன். இதற்கு இடையில் வாரணாசியில் இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.