
சிரியா மீது துருக்கி நடத்திய வான்வழித் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிரியாவின் வடக்கு மாகாணங்களை குறி வைத்து துருக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரிய – குர்திஷ் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள கோபனே நகரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியாவின் வடக்கு மாகாணமான அலெப்போ மற்றும் வடகிழக்கு மாகாணமான ஹசாகே பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த 2 மாகாணங்களிலும் 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 31 பேர் உயிரிழந்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு குர்திஸ் அமைப்பு தான் காரணம் என்று துருக்கி குற்றம் சுமத்திய நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதனால் சிரியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
newstm.in