பேருந்தில் சென்ற இளைஞர் கம்பி மோதி பலி..!! பரீட்சைக்கு நேராச்சி எழுந்திருப்பா… கதறி அழுத தாய்!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தண்டிராதேவிபட்டினம் பகுதியில் வசித்து வருபவர் ராஜாராம் பாண்டியன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் (30). குரூப்-1 தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்த இவருக்கு ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று காலை பரமக்குடியில் இருந்து அரசுப் பேருந்தில் புறப்பட்டு ராமநாதபுரம் நோக்கி வந்துள்ளார்.

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து சத்திரக்குடி சுங்கச்சாவடியில் சென்றபோது, அங்கிருந்த இரும்பு கம்பி இவரது மீது மோதி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த பயணிகள் அலறினார்கள். உடனே பேருந்து அங்கு நிறுத்தப்பட்டது.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனை கேட்டு கோபாலகிருஷ்ணனின் பெற்றோர், உறவினர்கள், கிராம மக்கள் கதறி அழுதனர்.

“இந்த முறை எப்படியாவது பாஸாகிறனும், சாப்பிட்டா லேட்டாக்கிரும்ன்னு சாப்பிடாம கூட ஓடுனியேப்பா, எங்கள விட்டு ஒரேடியா போறதுக்கு தானா.. பரீட்சைக்கு நேராச்சி எழுந்திருப்பா” என கோபாலகிருஷ்ணன் தாய் கதறி அழுதது காண்போர் கண்களையும் குளமாக்கியது.

இறந்த கோபாலகிருஷ்ணனுக்கு திருமணமாகி மனைவி கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவரது மனைவிக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் இறந்ததை அறிந்து அவரது கர்ப்பிணி மனைவி கதறியது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.