சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. 17 வயதான இவர் கல்லூரியில் படித்துவந்தார். மேலும் கால்பந்தும் விளையாடிவந்தார். இவருக்கு சமீபத்தில் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கால் மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முஇந்தும் வலி குறையாததால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கால் அகற்றப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 15ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரின் உயிரிழப்புக்கு பெரியார் நகர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் கவனக்குறைவான சிகிச்சையே காரணம் என மருத்துவக் கல்வி இயக்குனர் அறிக்கை அளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அரசு மருத்துவர்களே இப்படி அலட்சியமாக சிகிச்சை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தர் ஆகிய இரண்டு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இருவரும் முன்பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களுக்கு முன்பிணை வழங்க மறுத்த நீதிமன்றம், “இந்த வழக்கில் போலீஸார் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். டாக்டர்களை கைது செய்வதற்கு தடை விதிக்க முடியாது” உத்தரவிட்டது.
இந்தச் சூழலில் மருத்துவர்களும், அறுவை சிகிச்சையின்போது உடனிருந்த மருத்துவ உதவியாளர்களும் கைது செய்யப்படவிருக்கிறார்கள். இதனால் மருத்துவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாகிவிட்டனர். எனவே அவர்களை பிடிப்பதற்காக கொளத்தூர் துணை காவல் ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.
முன்னதாக மருத்துவர்களை கைது செய்தால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுமென்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.