தமிழகத்தில் கடந்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிகக்கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால், இந்த அறிவிப்பையும் மீறி மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட கைப்பாணிக்குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா, நேற்று முன்தினம் மீன் பிடிப்பதற்கு கடலுக்குச் சென்றுள்ளார்.
இதனை அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் பார்த்து, அரசு உத்தரவை மீறி மீன் பிடிப்பதற்கு கடலுக்குச் சென்றது குறித்து இளையராஜாவிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பின்னர் மீண்டும் இளையராஜா தரப்புக்கும், கார்த்தி தரப்புக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதில், இரு தரப்பினரும் தனித்தனி குழுவாக மோதிக்கொண்டனர்.
இந்த மோதலில், இரு தரப்பையும் சேர்ந்த சோலைவள்ளி, சத்தியமூர்த்தி, மேகாயன் உள்பட மொத்தம் நான்கு பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, அந்தப்பகுதியில் மேற்கொண்டு எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்கு, தெருவில் கூடியிருந்த மீனவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர், இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில் 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.