வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால் அறிவிப்பை மீறி மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட கைப்பாணிக்குப்பத்தை சேர்ந்த இளையராஜா (30) என்ற இளைஞர் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார்.
இதனையடுத்து அதே கிராமத்தை சேர்ந்த கார்த்தி (35) என்பவர், உத்தரவை மீறி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றது குறித்து இளையராஜாவிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஏற்கனவே முன்விரோதம் இருந்த நிலையில், இதனால் இளையராஜா தரப்புக்கும், கார்த்திக் தரப்புக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தனித்தனி கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர்.
இதில் இரு தரப்பையும் சேர்ந்த சோலைவள்ளி (60), சத்தியமூர்த்தி (35), மேகாயன் (50) உள்பட 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இவர்கள் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் கைப்பாணிக்குப்பம் கிராமத்துக்கு சென்று தெருவில் கூடியிருந்த மீனவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மோதல் தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பதற்றத்தை தணிக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
newstm.in