மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தபடுகிறதா? என்பதைக் கண்காணிப்பதற்கு, மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் முதல் கூட்டம் கடந்த மே மாதம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில், மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பொறுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையை மதிப்பாய்வு செய்தல், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மாநில அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித வளங்களின் செயல்திறனை வரிசைப்படுத்தி மதிப்பாய்வு செய்தல்.
மேலும், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நீக்கி திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது, அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வடிவமைப்புகளை மேம்படுத்த அல்லது நடுநிலைப்படுத்த உரிய திருத்தங்களைச் செய்ய பரிந்துரைகள் வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.