புதுடில்லி ;’மத்திய அரசால் தடை செய்யப்பட்ட, ‘பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா’ அமைப்புக்கு வளைகுடா நாடுகளில் இருந்து நிதி திரட்ட தேவையான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன’ என, அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பி.எப்.ஐ., எனப்படும், ‘பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா’ என்ற அமைப்புக்கு சொந்தமான இடங்களில் நாடு தழுவிய சோதனையை அமலாக்கத்துறை சமீபத்தில் மேற்கொண்டது.
என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை உடன் இணைந்து மாநில போலீசும் இந்த சோதனையை நடத்தின.அப்போது, 100க்கும் மேற்பட்ட பி.எப்.ஐ., அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த அமைப்பு தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும், ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதும் சோதனையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து, பி.எப்.ஐ., அமைப்புக்கு மத்திய அரசு ஐந்தாண்டுகள் தடை விதித்தது.
இந்த அமைப்பைச் சேர்ந்த முக்கிய நபர்களான பெர்வேஸ் அகமது, முகமது இலியாஸ், அப்துல் முகீத் ஆகியோர் கைது செய்யப்பட்டு புதுடில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை, புதுடில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சமீபத்தில் தாக்கல் செய்தது.
அதில், வளைகுடா நாடுகளில் இருந்து நிதி திரட்ட தேவையான கட்டமைப்பு வசதிகளை, பி.எப்.ஐ., அமைப்பு உருவாக்கி வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வளைகுடா நாடுகளில் இருந்து, பி.எப்.ஐ., அமைப்பைச் சேர்ந்த தனி நபர்களின் வங்கி கணக்குகளுக்கு நிதி மாற்றப்பட்டு, பின் அந்த அமைப்பின் கணக்குக்கு அவை மாற்றப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement