அசாம்-மேகாலயா எல்லையில் துப்பாக்கி சூடு, பதற்றம்: 6 பேர் பலி; இணையதள சேவை துண்டிப்பு

ஷில்லாங்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்திற்கு அடுத்து உள்ள மேகாலயாவுக்கு இடையே மேற்கு ஜைந்தியா மலைப்பகுதியில் முக்ரோ என்ற இடம் இரு மாநில எல்லையாக உள்ளது. இந்த பகுதியில், திடீரென துப்பாக்கி சூடு நடந்து உள்ளது. இதனால், இரு மாநிலங்கள் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில், அசாம் வன அதிகாரி உள்பட 6 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இன்று காலை முதல் மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது என அரசு தெரிவித்து உள்ளது.

மேகாலயா முதல்-மந்திரி கன்ராட் சங்மா துப்பாக்கி சூடு, உயிரிழப்பு சம்பவங்களை உறுதிப்படுத்தி உள்ளார். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விசாரணை நடந்து வருகிறது. எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது என அவர் கூறியுள்ளார்.

வாட்ஸ்அப், சமூக ஊடகங்களான பேஸ்புக், டுவிட்டர் ஆகியவை தவறாக பயன்படுத்தப்படாமல் தடுக்கும் வகையில், மேற்கு ஜெயிந்தியா மலைகள், கிழக்கு ஜெயிந்தியா மலைகள், கிழக்கு காசி மலைகள், ரி-போய், கிழக்கு மேற்கு காசி மலைகள், மேற்கு காசி மலைகள் மற்றும் தென்மேற்கு காசி மலைகள் ஆகிய மேகாலயாவின் 7 மாவட்டங்களில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டு உள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.