ஒவ்வொரு புதன்கிழைமையும் நெல்லையில் இருந்து கொங்கண் ரெயில்வே வழியாக மும்பை தாதர் விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல், அந்த ரெயில் கடந்த 2-ந் தேதி நெல்லையில் இருந்து புறப்பட்டது.
அப்போது திடீரென சரவண அருணாச்சலம் என்பவர் ஓடும் ரெயிலில் உள்ள கடைசி பெட்டியில் ஏறுவதற்கு முயன்றுள்ளார். ஆனால், அந்தக் கடைசிப் பேட்டி பராமரிப்பு பெட்டி என்பதால் அதன் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அதனால், அந்த பயணி பெட்டியில் உள்ள வாசல் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தார்.
இதனை பார்த்த ரெயில் பெட்டி பராமரிப்பு பணியாளர்கள், அந்த பயணியின் பாதுகாப்புக் கருதி, ரெயில் நிலைய அதிகாரிக்கும், ரெயிலின் மேற்பார்வையாளருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் வருவதற்குள் ரெயில் ரெயில் 14 கிலோ மீட்டர் தொலைவை கடந்து கங்கைகொண்டான் பகுதிக்கு வந்து விட்டது. அதன் பின்னர் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு, அந்த பயணியை பத்திரமாக கீழே இறக்கி, எஸ்-2 பெட்டியில் பயணத்தை தொடர ஆரம்பித்தார்.
நெல்லை தாதர் விரைவு ரெயிலில் ஆபத்தான முறையில் பயணம் செய்த பயணியை காப்பாற்றிய ரெயில் பெட்டி பராமரிப்பு ஊழியர்கள் ஞானசேகரன், ராமச்சந்திரன் ஆகியோருக்கு மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.