ஏமாற்றிய 'மிருகம்' : கை கொடுக்குமா 'காரி' ?

தமிழ் சினிமாவில் 'சுப்பிரமணியபுரம்' படம் மூலம் தனது முதல் படத்திலேயே பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் சசிகுமார். அந்தப் படத்திற்குப் பிறகு 'ஈசன்' படத்தை இயக்கியவர், கடந்த பத்து வருடங்களாக படங்களை இயக்காமல் நடித்து மட்டுமே வருகிறார். விரைவில் ஒரு படத்தை இயக்க உள்ளேன், அதற்கான வேலைகள் முடிந்துவிட்டன என 'காரி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார் சசிகுமார்.

'குட்டிப்புலி' படத்திற்குப் பிறகு சசிகுமார் கதாநாயகனாக நடித்து வெளிவந்த சுமார் ஒரு டஜன் படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. தயாரிப்பாளராக கடும் கடன் சுமைக்கு ஆளானதால் சசிகுமார் அவரைத் தேடி வந்த படங்களைத் தவிர்க்காமல் கடனை அடைப்பதற்காக நடித்து வந்தார் என கோலிவுட்டில் ஒரு பேச்சு உண்டு. கடந்த வாரம் சசிகுமார் நடித்து வெளிவந்த 'நான் மிருகமாய் மாற' படம் கூட நெகட்டிவ் விமர்சனங்களைத்தான் அதிகம் பெற்றது.

அந்தப் படம் வெளிவந்த ஒரு வாரத்திற்குள் அவர் கதாநாகனாக நடித்துள்ள 'காரி' படம் வெளிவர உள்ளது. காங்கேயம் காளை மாடுகளில் 'காரி' மாடு பல சிறப்புகளைப் பெற்ற ஒன்று. இந்தப் படமும் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படம் என்பதால் அந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். கடந்த வாரம் வெளியான 'மிருகம்' சசிகுமாரை ஏமாற்றியிருக்க 'காரி'யாவது சசிகுமாரை காப்பாற்றட்டுமா என திரையுலகினர் காத்திருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.