மும்பை: மும்பை உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி கே.டி.தேசாய் நினைவு சொற்பொழிவு நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு. லலித் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் பேசியதாவது:
குற்றவியல் நீதி நடைமுறைகள், நாகரிக சமுதாயத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. எனினும் பாரபட்சமான நடவடிக்கைகளால் அப்பாவிகள் கைது செய்யப்படுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இத்தகைய அணுகுமுறையை தவிர்க்க வேண்டும், தடுக்க வேண்டும்.
உரிய காரணமின்றி பலர் கைது செய்யப்படுவதால் நீதித் துறையின் சுமை அதிகரிக்கிறது. நாடு முழுவதும் உள்ள சிறைக் கைதிகளில் 80 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள் ஆவர். சுமார் 20 சதவீதம் பேர் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் ஆவர். விசாரணை கைதிகளுக்கு எளிதில் ஜாமீன் கிடைக்க வேண்டும். விசாரணை கைதிகள், ஜாமீன் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உச்ச நீதிமன்றம் பல்வேறுவழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. அவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
பூனையை பிடிக்க எலி: விசாரணை கைதிகள் விவகாரத்தில் ஒரு உதாரணத்தை கூற விரும்புகிறேன். பூனையை பிடிக்க ஒரு எலியை தயார் செய்தனர். அந்த பூனை 10 ஆண்டுகளாக எலியை விரட்டியது. ஆனால் எலியை பிடிக்க முடியவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பூனைக்கு ஒரு விஷயம் புரிகிறது. இதுவரை எலியை விரட்டவில்லை, முயலை விரட்டி செல்கிறோம். முயல் வேகத்துக்கு நம்மால் ஓட முடியாது என்பது பூனைக்கு தெளிவாகப் புரிகிறது.
பீமா கோரேகான் வன்முறை தொடர்பான வழக்கில் கவுதம் நவ்லேகாவை வீட்டுக் காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இது மிகச் சிறந்த முன்னுதாரணம்.
தேவையற்ற வழக்குகள், கைது நடவடிக்கைகள், சிறையை தவிர்க்க வேண்டும். சில நேரங்களில் சிவில் விவகாரம் தொடர்பான வழக்குகள்கூட கிரிமினல் பிரிவில் பதிவு செய்யப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் நீதித் துறையின் சுமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.