கோவை மாவட்டத்தில் சிகரெட் பிடித்ததை தந்தை கண்டித்ததால் 13 வயது சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோவை மாவட்டம் சவுரிபாளையம் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சதீஷ்குமார்(37). இவரது மகன் தவ்சிக் மவுலிஸ் (13). இவருக்கு குட்கா, சிகரெட் பழக்கம் இருப்பதால் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சௌரிபாளையம் அருகே நின்று தவ்சிக் மவுலிஸ் சிகரெட் பிடித்துள்ளார். அப்பொழுது அந்த வழியாக ஆட்டோவில் சென்ற சதீஷ்குமார் மகன் சிகரெட் பிடிப்பதை பார்த்து வேதனையில், அவனை திட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து மகனை வீட்டில் விட்டுவிட்டு, பின்பு சதீஷ்குமார் வேலைக்கு சென்று உள்ளார். இதைத்தொடர்ந்து இரவு வீட்டிற்கு வந்த சதீஷ்குமார், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் நீண்ட நேரம் தட்டியுள்ளார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த சதீஷ்குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகன் தவ்சிக் மவுலிஸ் தூக்கில் தொங்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.