மக்களே உசார்! மெட்ராஸ் ஐ வரமால் தடுக்க சில வழிகள்!

சிலவருடங்களாக ‘மெட்ராஸ் ஐ’ என்கிற பெயரையே மறந்துபோன நமக்கு நான் இன்னும் இருக்கிறேன் என்று தெரியப்படுத்துவது போல தற்போது ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவி வருகிறது. குழந்தைகளிடம் இந்த நோய் அதிகமாக பரவி வருகிறது.  வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் முடிவடைந்த பிறகு இந்த ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு ஏற்படும், ஆனால் இந்த ஆண்டு நீடித்த மழைப்பொழிவு காரணமாக இதன் தாக்கம் அதிகரித்து இருக்கிறது.  20% க்கும் அதிகமானோர் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கான்ஜுன்க்டிவிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வேகமாகப் பரவிவிடும், பெரும்பாலும் இது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது.  

கண்ணில் சுரக்கும் ஒருவகையான திரவத்தின் மூலம் இது பரவுகிறது, கான்ஜுன்க்டிவிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் கண்ணைத் தொட்டால் அவருக்கு அந்நோய் பரவும்.  இதனால் கண்களில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் சிவத்தல், அழுக்குகள் வெளியேற்றம் மற்றும் அதிக உணர்திறன் கொண்ட கண்கள் ஆகியவை ஏற்படும்.  ஆனால் கார்னியா பாதிக்கப்பட்டால் மங்கலான பார்வை ஏற்பட்டுவிடும், இதனால் சிலருக்கு கண்களில் வீக்கம் ஏற்படும் மற்றும் வீக்கம் குணமடைய அதிக நேரம் எடுக்கும். கான்ஜுன்க்டிவிடிஸ் பொதுவாக ஒரு சிறிய கண் தொற்று என்றாலும் இதற்கு சரியான முறையில் மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.  மருந்தகங்களுக்கு சென்று நீங்களே சுயமாக மருந்துகளை வாங்கி உபயோகிக்கக்கூடாது.  

கண்கள் மென்மையான பகுதி என்பதால் அதில் சுயமாக நீங்களே முடிவு செய்து மருந்துகள் பயன்படுத்துவது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.  நோயாளிகள் சுய மருந்து, கண் சொட்டு மருந்துகளைத் தவிர்க்க வேண்டும் மற்றும் ஒரு கண் நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகள், கண் சொட்டு மருந்துகளை களைப் பயன்படுத்த வேண்டும்.  கான்ஜுன்க்டிவிடிஸ் நோயானது 90% அடினோவைரஸால் ஏற்படுகிறது,  ஒருவரது துண்டுகள், தலையணை கவர்கள் மற்றும் மேக்கப் பொருட்கள் போன்ற தனிப்பட்ட உடைமைகளை பயன்படுத்துவதால் இந்நோய் மற்றொருவருக்கு எளிதில் பரவும்.  எனவே, நோயாளிகளை தனிமைப்படுத்துவது முக்கியம்.

நோயாளிகள் தங்கள் கண்களில் இருந்து வெளியேறும் கழிவுகளை துடைக்க காகித நாப்கின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்றும் பயன்படுத்திய நாப்கின்களை உடனடியாக அகற்ற வேண்டும்.  பழைய கான்டாக்ட் லென்ஸ்களை தவிர்த்துவிட்டு மருத்துவரின் அறிவுரை பெற்ற பின்னர் புதியதை பயன்படுத்த வேண்டும்.  மீண்டும் மீண்டும் ஒரே கைக்குட்டைகளைப் பயன்படுத்தக்கூடாது, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் மற்றும் தொற்றுநோயைத் தடுக்க மற்றவர்களின் தனிப்பட்ட பொருட்களை பயன்படுத்தக்கூடாது.  நோய் பாதித்தவர்கள் சரியாகும் வரை பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.