சென்னை: தமிழகத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தின் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது. சட்டம் – ஒழுங்கு சூழலை காட்டி ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து ஆர்எஸ்எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 6 இடங்களை தவிர்த்து மீதமுள்ள 44 இடங்களில் உள் அரங்க நிகழ்வாக ஊர்வலம் நடத்திக் கொள்ள ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி செப்டம்பர் மாதம் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும்.
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில் மற்ற அரசியல் கட்சியினரின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ளாமல், தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளது’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.