யானை வழித்தடங்களை அடைத்திருக்கும் ஈஷா மையம்: உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கில் தன்னையும் சேர்க்க கோரி சென்னையை சேர்ந்த வன விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர் முரளிதரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ஈஷா அறக்கட்டளை அமைந்துள்ள இடத்திற்கு அருகே உள்ளது பகுதி யானைகள் தண்ணீர் தேடி வரும் பகுதியாகும். யானைகள் வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் அவை ஊருக்குள் வரும் அபாயம் ஏற்படுகிறது, இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளதாகவும், யானைகள் தாக்கியதில் சுமார் 160க்கும் மேற்பட்ட மனிதர்கள் இறந்துள்ளனர் என்றும் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், “இந்து உணர்வுகளை புண்படுத்தும் வகையில் டிஸ்கோ நடனம் நடத்தி, சினிமா நடிகர்கள் சிவராத்திரி இரவுகளில் திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடுகிறார்கள்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதிக டெசிபல் ஒலியால் அப்பகுதியை மாசுபடுத்துவதாகவும், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் அவர் தனது மனுவில் அவர் குற்றம் சாட்டியுள்ளார். காடுகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தினசரி ‘ஆதி யோகி’ லேசர் ஷோ நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், ஈஷா அறக்கட்டளை தாக்கல் செய்துள்ள மனுவில் தன்னையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டு என கோரிக்கை வைத்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு விசாரணை வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை வருகிற 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.