தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக இருந்தாலும் சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் காவல்துறையினர், வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திதுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் பதினாறு வயது மாணவிக்கு, சக மாணவன் தாலி கட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து சிதம்பர நகர் போலீசார் மாணவனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் நலக்குழு பாதிக்கப்பட்ட மாணவியை அரசு நல காப்பகத்தில் அனுமதித்தது. அதன் பின்னர் மாணவி மீட்டு தர கோரி மாணவியின் தந்தை மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது, சமூக வலைதளங்கள் மூலம் உருவாகக்கூடிய அழுத்தத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இது போன்ற நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இருவரையும் கைது செய்ததன் மூலமாக என்ன சாதித்து விட்டீர்கள் என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பினார்கள்.
அதன் பின்னர், சிறார் சம்பந்தமான வழக்குகளை கையாள்வது குறித்து காவல்துறை, மருத்துவத்துறை, குழந்தைகள் நல வாரியம் மற்றும் நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் ஆகியோர் இணைந்து ஆலோசனை செய்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு குறித்த விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.