மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்க்கான நீர் திறப்பு 15,000 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஓரிரு நாட்களை தவிர தற்போது வரை அதன் முழுக்கொள்ளளவான 120 அடியில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக, அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர் முழுவதும் டெல்டாவிற்கு வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், அணைக்கு நேற்றுவரை விநாடிக்கு 10,400 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதில் 400 கனஅடி நீர், அணையின் கால்வாய் பாசனத்திற்கும் , 10 ஆயிரம் கனஅடி நீர் டெல்டாவிற்கும் திறக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு இன்று விநாடிக்கு 11,107 கனஅடியாக அதிகரித்தது. இந்த சூழலில், டெல்டா பாசனத்திற்கான நீர் தேவை அதிகரித்ததால், அணையில் இருந்து டெல்டாவிற்கு திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி என்ற அளவில் இருந்து இன்று மாலையில் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கான நீர் திறப்பு விநாடிக்கு 400 கனஅடி வீதம் திறக்கப்படுவது தொடர்கிறது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாகவும் இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.