இந்தித் திணிப்பைக் கண்டித்து திமுக நிர்வாகி பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை! – சேலத்தில் பரபரப்பு

சேலம், மேட்டூர் அருகேவுள்ள பி.என்.பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு தாழையூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (85). இவர் நங்கவள்ளி தி.மு.க முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளராக இருந்தவர். இவருக்கு ஜானகி என்ற மனைவியும் மணி, ரத்னவேல் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர் தி.மு.க-மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றிருக்கிறார். மேலும் தி.மு.க ஆட்சியின்போது பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கையால் பல்வேறு பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

மத்திய பா.ஜ.க அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்ட தங்கவேல், இன்று காலை பி.என்.பட்டி பேரூராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு தாழையூர் தி.மு.க கட்சி அலுவலகத்துக்கு கையில் பெட்ரோல் கேனுடன் சென்றிருக்கிறார்

தங்கவேல்

மனஉளைச்சலிலிருந்த அவர் 11 மணியளவில், ஒரு வெள்ளைத் தாளில், “மோடி அரசே… மத்திய அரசே! அவசர இந்தி வேண்டாம். தாய்மொழி தமிழ் இருக்க கோமாளி இந்தி மொழி எதற்கு? மாணவ மாணவிகள் வாழ்க்கையைப் பாதிக்கும் இந்தி ஒழிக… இந்தி ஒழிக” என எழுதியிருக்கிறார்.

பின்னர்தான் வாங்கி வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்துக்கொண்டு, அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிழந்தார். இந்தச் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.